Wednesday, October 21, 2009

மௌனமாய் ஒரு மழைக்காலம்

ஜன்னலின் ஓரம் அமர்ந்து கண்ணாடியில் மழை போட்டுக் கொண்டு இருக்கும் நீர்க்கோலங்களை பார்த்தபடி இருந்தேன். எங்கிருந்தோ வரும் துளி ஒன்று, சிதறிக் கிடக்கும் நீர்த் துளிகளை ஒன்று சேர்த்தபடி கண்ணாடியில் ஓடிப்பிடித்து விளையாடி கொண்டிருந்தது. மழையை ரசிக்க கற்று கொடுத்தவள் கூட அவள் தான். அவளுக்கு மழை ரொம்பவும் பிடிக்கும், என்னை நனைக்காத போது மட்டும். தனியில் இருந்தால் மழையில் ஆனந்தமாய் நனைவாள். நான் உடன் இருந்தால் "இந்த மழைக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை" என்று மழையை கடிந்து கொள்வாள். எப்படி இவளால் மட்டும் அன்போடும் வாஞ்சையோடும் எப்போதும் இருக்க முடிகிறது என்று யோசித்தபடி, மழையாய் வழியும் அவள் நினைவுகளில் நனைந்து கொண்டு இருந்தேன். தேநீர் மணம் சட்டென்று நினைவுகளில் இருந்து என்னை மீளச் செய்தது.

என் கைகளில் ஏலக்காய் போட்ட தேனீர் கோப்பையைக் கொடுத்து விட்டு என் எதிரினில் அமர்ந்து கொண்டாள். அவளும் ஜன்னலின் வழியே மழையை பார்க்க ஆரம்பித்தாள். அவளுடைய தீவிரமான முகபாவம் அவள் மழையை ரசிக்கிறாளா இல்லை என்னைப் போலவே மழையால் தூண்டப்பட்ட வேறு ஏதேனும் நினைவுகளில் மூழ்கி இருக்கிறாளா என்று என்னை யோசிக்க வைத்தபடி இருந்தது. நான் அவள் கண்களை உற்று நோக்கினேன். ஆனால் அவளுடைய ஓரப்பார்வை கூட என் பக்கம் திரும்பவே இல்லை. நான் என்ன யோசிக்கிறேன் என்று அவளும் நினைப்பாளோ என்று எண்ணியபடி மறுபடி ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டேன். எங்கள் இருவருக்கும் இடையிலான மௌனம் அதன் வேலையை தொடங்கியிருந்தது. முன்பு எப்போதோ நான் எழுதிய கவிதை ஒன்று நினைவிற்கு வந்து தொலைத்தது.

மௌனம்
நம்மிடையே நிலவும் மௌனத்திற்கு என்ன வேலை தெரியுமா? - என்னை
உன்னை பற்றியே நினைக்கச் செய்வதும் - உன்னை
என்னை பற்றியே நினைக்காதது போல் நடிக்கச் செய்வதும் தான்.

மூடிய ஜன்னல் கதவுகளின் இடுக்குகள் வழியே குளிர் காற்று லேசாக ஊடுருவியபடி இருந்தது. குளிருக்கு ஏதுவாக அவள் தேனீர் கோப்பையை இரு கைகளிலும் அணைத்துப் பிடித்திருந்தாள். மழை இப்போது வலுத்து சத்தமாக பெய்யத் தொடங்கி இருந்தது. மழையின் சத்தத்தில், நான் அவளிடம் என்ன பேச வேண்டும் என்று யோசித்து வைத்திருந்தேனோ அவை யாவும் மனதிற்குள்ளாகவே கரைவது போல் இருந்தது. பழகாதவர்களிடம் கூட என்னால் சுலபமாய் பேசி விட முடிகிறது. ஆனால் பழகிய அவளிடம் தான் சொல்வதற்கு மிகவும் கடினமாக இருப்பதாக எனக்குப் பட்டது. என் முகத்தில் குழப்ப ரேகை ஓடுவதை அவள் கவனித்திருக்க்க் கூடும் என்று தோன்றியது.  பிரச்சினை குறித்து முன்பாகவே அவள் யோசித்து முடித்திருக்கக் கூடும் என்பது அவளின் தெளிவான முகத்தை பார்த்து என்னால் யூகிக்க முடிந்தது. இருந்தாலும் யார் முதலில் மௌனத்தை உடைப்பது என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருந்தது.

கோப்பையைக் கீழே வைத்த போது அவளது வலது கையை என் இரு கைகளாலும் இறுக பற்றிக் கொண்டேன். அவள் தனது இடது கையை என் கைகளின் மீது வைத்துக் கொண்டாள். இருவரும் வார்த்தைகளை தொலைத்து விட்டிருந்தோம். ஏதும் பேசிக் கொள்ளவில்லை. எதுவும் பேச வேண்டும் என்று தோன்றவும் இல்லை.அவள் ஒரு சிறு குழந்தையை போல என் கை விரல்களை ஒவ்வொன்றாய் நீவி விட்ட படி இருந்தாள். இப்போது மழை நின்று போய் இருந்தது. இலைகளில் இருந்து துளிகள் வடிந்தபடி இருந்தன. ஓரிரு பூக்கள் லேசான காற்றில் சுற்றியபடி கீழே விழுந்து கொண்டிருந்தன. மண் வாசம் வீச ஆரம்பித்திருந்தது. மேல் திசையில் மேகங்களை விளக்கிக் கொண்டு சூரியன் தன் பொன் கிரணங்களை வீசத் தொடங்கி இருந்தது. தேங்கி கிடந்த நீரில் அவை ஒளிக்கோலங்களை போட்டுக் கொண்டு இருந்தது. என்றோ என் நாட்குறிப்பில் எழுதிய இரு வரிகளை மனக்கிடங்கில் இருந்து தோண்டி  எடுத்தது மனது.

மௌனம்
சில நேரங்களில் சாதிக்கும்
சில நேரங்களில் சோதிக்கும்

எங்களின் மௌனத்தை எந்த வகையில் பொருத்துவது என்று புலப்படவில்லை. மௌனத்தின் இடைவெளியில் நடப்பவைகள் யாவும் ஒரு விதமான அசாதாரண சுழலை உண்டாக்கி விடுகிறது. மீண்டும் ஜன்னலின் வெளியே பார்த்தபடி இருந்தோம், கைகள் கோர்த்தபடி. மனமெங்கும் ஈரமேறிக் கிடப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. மழையின் மௌனத்தில் எங்களின் மௌனம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டே இருந்தது.

Wednesday, October 14, 2009

வீடும் காதலும் - 2

முதல் பாகம் படிக்க இங்கே செல்லவும் - வீடும் காதலும் - 1



கடைசி இரண்டு குடித்தனங்கள் ஏழாவது வாசலுக்கு பிறகு இருக்கும். இந்த வீடுகளின் எதிரே மூன்று தூண்கள் நிற்கும். ஒரு தூணிற்கும் மற்றொன்றிற்கும் இடையே பத்தடி இடைவெளி இருக்கும். மேலிருக்கும் தகரத்தை தாங்குவதற்கு தான் இந்த தூண்கள் என்றாலும், தூண்களை சுற்றி விளையாடுவது எப்போதும் எங்களுக்கு பிடித்தமானது. இப்போதெல்லாம் தூண்கள் வைத்து யாரும் வீடு கட்டுவதாக தெரியவில்லை. ஒன்று கவனித்திருக்கிறேன் - தூண்கள் இருக்கும் வீடுகளில் குழந்தைகளின் குதூகலம் நிறைந்து இருக்கும். மாநகரங்களில் இருந்து ஆண்டு விடுமுறைக்கு ஒரே ஒரு முறை வரும் குழந்தைகள் கூட தூண்களை கண்டால் உடனே மகிழ்ச்சியுடன் விளையாட தயாராகி விடுவார்கள். தூண்கள் நமது எண்ணத்திற்கு ஏற்றாற் போன்று மாறும் தன்மையுடையவை என்று எனக்கு தோன்றுவது உண்டு. தனிமையில் தூண்களை பிடித்துக் கொண்டு யாரை நினைக்கிறோமோ அவர்களாகவே மாறும் தன்மை மனதிற்கு ஒரு வித மயக்கத்தை தருபவை. சில சமயங்களில் சற்று அபாயமானதும் கூட. என்னைப் பொறுத்த வரையில் மனதிற்கு நெருக்கமான நண்பர்களை போலத்தான் இந்த தூண்களும்.

எனக்கும் இந்த தூண்களுக்கும் இடையிலான உறவு அற்புதமானது. இன்றளவும் என் இடது நெற்றியில் காணப்படும் வடு இந்த தூண்களில் ஒன்றினால் ஏற்பட்டது தான். காயத்தின் காரணம் என்னுள் லேசான குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது உண்டு. நந்தினியிடம் கூட அந்த காரணத்தை சொன்ன போது விழுந்து விழுந்து சிரித்தாள். நினைவு தெரியாத வயதில் இந்த வீட்டில் ஒரு குடும்பம் ஆந்திராவில் இருந்து வந்து குடியிருந்திருக்கிறது. அந்த குடும்பத்திலும் என் வயதையொத்த சிறுமி இருந்திருக்கிறாள். அவளை முத்தமிட துரத்தி சென்று தூணில் மோதிய போது ஏற்பட்டது தான் என் நெற்றியில் இன்னும் இருக்கும் விழுப்புண் என்று அம்மா அடிக்கடி சொல்லி இருக்கிறாள்.

தூண்களை பார்த்த பிறகு எனது மனவருத்தம் கூடிப்போனது. எங்கள் வீடு ஆறாவது மற்றும் ஏழாவது வாசலுக்கு இடையே அமைந்தது. எங்கள் குடித்தனம் இரண்டு அறைகள் கொண்டது. இரண்டு அறைகளுமே பத்தடி அகலமும், எட்டடி நீளமும் கொண்டவை தான். இந்த மிகச் சிறிய அறைகளில் தான் முதலில் ஐவரும் அப்பாவின் மறைவிற்கு பிறகு நால்வரும் காலம் தள்ளினோம். இரண்டு அறைகளையும் இணைப்பது ஒரு நடை மட்டுமே. நடையில் நன்றாக காற்று வரும். பின்னே உள்ள தோட்டத்திற்கும் குடித்தனங்களுக்கு செல்ல இந்த நடை ஒரே வழி என்பதால் அம்மா மதிய நேரத்தில் மட்டும் மின்சாரம் சேமிக்கும் பொருட்டு நடையில் படுத்து கொள்வதுண்டு. இரவில் சில சமயங்களில் தூக்கம் பிடிக்க வில்லை என்றால் அம்மாவும் நானும் நடையில் சென்று உறங்குவோம் அல்லது மாடிக்கு சென்று விடுவோம்.

சத்தம் கேட்காமல் நடையை தாண்டி மாடி செல்லும் படிகட்டுகளை அடைந்தேன். நந்தினி ஒரு போதும் இப்படி நடந்து கொள்பவள் இல்லை. அவள் அப்படி நடந்து கொள்ள நிச்சயம் ஏதேனும் காரணம் இருக்கும் என்று எண்ணியபடியே மாடிக்கு சென்றேன். முன்பு ஒரு முறை சைக்கிளில் அவளை வைத்து ஒரே ஒரு ரவுண்ட் அடிக்க வேண்டும் என்று சொன்ன போதும் நிறைய காரணங்கள் சொன்னாள். பிறகு அவளே ஒரு நாள் நான் எதிர்பாராத சமயத்தில் எனது சைக்கிளில் வந்து ஆச்சரியப்படுத்தினாள்.அதே போல இந்த முறையும் நடக்காதா என்று ஏங்க ஆரம்பித்தேன்.

மாடிக்கு செல்ல இரண்டு வழிகள் உண்டு. ஒன்று வீட்டின் உள்ளிருந்து செல்வதற்கும் மற்றொன்று வீட்டின் வெளியிலிருந்தே செல்வதற்கும் அமைக்கப்பட்டவை. உள்ளிருந்து செல்லும் வழியில் சென்றால் மாடியில் இருக்கும் இரண்டாவது குடித்தனத்திற்கே நேரே சென்று விடலாம். வெளியில் இருந்து செல்லும் வழியில் சென்றால் பால்கனி, விதானத்தின் ஜன்னல்கள், முதல் குடித்தனம் இவற்றை கடந்து தான் இரண்டாவது குடித்தனத்திற்கு வரவேண்டும். பால்கனியில் இருந்து பார்த்தால் வடக்கே காமாட்சி அம்மன் கோவிலும், வடமேற்கில் ஏகாம்பரேசுவரர் கோவிலும் தெரியும். பக்கத்து வீட்டு சுவரின் உதவியுடன் இரண்டாவது குடித்தனத்தின் தளத்தின் மீது ஏறினால் தான் கிழக்கில் இருக்கும் வரதராஜப்பெருமாள் கோவில் தெரியும்.

காஞ்சிபுரத்தில் உற்சவம் இல்லாத மாதங்களை தான் சீக்கிரம் எண்ணி விட முடியும். சித்திரையில் வரதராஜப்பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், மாசியில் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோத்சவம், பங்குனியில் ஏகாம்பரேசுவரர் கோவில் பிரம்மோத்சவம் என ஊரே ஒவ்வொரு மாதமும் களைகட்டும். வரதராஜப்பெருமாள் மட்டும் நாங்கள் இருந்த காமராஜர் வீதி வழியே பத்து நாட்களும் காலையில் ஒரு வாகனத்திலும் மாலையில் ஒரு வாகனத்திலும் செல்வார். மூன்றாம் நாள் கருட சேவையும், ஏழாம் நாள் தேர்த் திருவிழாவும் கூட்டம் ரொம்பி வழியும். தேரன்று மாடியில் நின்று கொண்டு தெற்கே மூங்கில் மண்டபத்தில் தேர் எங்கள் தெருவில் திரும்பும் முன்னரே அனைவரும் ஒன்று சேர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்து விடுவோம்.

மாடியின் இரண்டாவது குடித்தனத்தில் எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு பெரிய கூட்டுக்குடும்பம் இருந்தது. எங்களுக்கும் முன்பாகவே அந்த குடும்பம் செட்டியார் வீட்டில் குடியேறியது என்று அம்மா சொல்வாள். அந்த குடும்பத்தின் மங்கையர்க்கரசி பாட்டி கதை சொல்லியபடி அவளுடைய பேரப் பிள்ளைகளுக்கும், எனக்கும், என் இரு சகோதரர்களுக்கும் பௌர்ணமி இரவுகளில் உருண்டை சாதம் கொடுப்பாள்.சித்திரை மாதத்தில் மாலை நேரங்களில் பால்கனியில் தண்ணீர் ஊற்றி விடுவார்கள்.சித்திரை மாத நித்தி்ரைகள் யாவும் வானத்தில் நட்சத்திரங்களையும் நிலவையும் பார்த்தபடியே கழியும்.

சித்திரையில் வரும் பௌர்ணமியன்று வரதராஜப்பெருமாள் பாலாற்றில் இறங்குவது கள்ளழகர் வைகையில் இறங்குவது போல விசேஷமானது. சித்ரா பௌர்ணமி அன்று நடக்கும் அந்த விழா நடப்பாவி உத்சவம் என்று அழைக்கப் படுகிறது. ஊரில் இருக்கும் மக்கள் யாவரும் வித விதமான உணவுகளை தயாரித்து கொண்டு மாலை நடந்து சென்று பாலாற்றில் அமர்ந்து குடும்பம் குடும்பமாக மகிழ்ச்சியாக உண்டு விட்டு திரும்புவார்கள். எங்களைப் போல குடித்தனங்களில் இருப்பவர்கள் சித்ரா பௌர்ணமி அன்று ஆளுக்கு ஒரு வகையான சாதம் தயாரித்து கொண்டு வருவோம். எடுத்து செல்லும் உணவு வகைகள் ஒற்றைப் படையில் இருக்க வேண்டும் என்று செட்டியாரம்மா சொல்வாள். செட்டியாரம்மாவோ செட்டியாரோ இது வரை நடப்பாவிற்கு வந்தது இல்லை. இருந்தாலும் செட்டியாரம்மா செய்து தரும் ஓட்டை வடையும் நெய் பொங்கலும் எங்களுடன் வருடம் தவறாமல் வந்துவிடும். என் அம்மா ஸ்பெஷல் பருப்பு வடையும் புளியோதரையும். மேல் வீட்டில் இருக்கும் பாட்டி மாங்காய் சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் என்று கொண்டு வருவாள்.

[இப்போ இந்த கதையில வர நந்தினி என் காதலி இல்லை, பக்கத்து வீட்டு சின்ன பொன்னு தான்னு சொன்னா நம்பிடவா போறீங்க.]

மாடியில் இருந்து இறங்கி சைக்கிளை எடுத்துக் கொண்டு ராமகிருஷ்ண மடத்தில் இருக்கும் விவேகானந்தர் நூலகம் சென்றேன். நந்தினியை அங்கே வைத்து தான் முதலில் சந்தித்தது. உள்ளே நுழைந்ததுமே ஆச்சரியம் காத்திருந்தது. நந்தினியின் தோழி கல்யாணி "நந்தினி உனக்காக வரலாற்று நாவல்கள் இருக்கிற இடத்துல காத்துக்கிட்டு இருக்கா" என்று சொல்லிப் போனாள்.நூலகத்தின் மாடியில் ஒரமாக இருக்கும் வரலாற்று நாவல்கள் பகுதி. பேச வேண்டுமானால் அந்த இடம் தான் சரியாக இருக்கும். போனதும் கிடைத்தது நான் கேட்ட ஒற்றை முத்தம். அதிர்ச்சி தான் என்றாலும் மனம் ஆனந்த தாண்டவம் ஆடியது. என் கையில் ஒரு சிகப்பு ரோஜாவை திணித்து விட்டு வெட்கத்தை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவள் ஒடியே போனாள். முத்தம் கிடைத்த மகிழ்ச்சியில் மனம் நெகிழ்ந்து போய் இருந்தது.

வழக்கம் போல சைக்கிளை இரண்டாவது வாசலில் நிறுத்தி விட்டு ஊஞ்சலை இடித்த படி ஒவ்வொரு வாசலாக கடந்து சென்று கொண்டே இருந்தேன். தூண்களை தொடுகையில் நந்தினியின் ஸ்பரிசம் உணர்ந்தேன். நேரே தோட்டத்திற்கு சென்றேன். பக்கத்து வீட்டு கொடுக்காப்புளி மரத்தில் கிளிகள் இரண்டு சிறகுகள் கோதிக் கொண்டிருந்தன. வண்ணத்துப்பூச்சிகள் இரண்டு அங்கும் இங்கும் காற்றில் அலைந்தபடி இருந்தது. தும்பிகள் புற்களின் மேல் தவமிருந்தன. மல்லிகை மொட்டுக்கள் பூப்பதற்கு நிலவின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தன. தேவலோகம் போல தோட்டம் எனக்குள் உருமாறிக் கொண்டிருந்தது. நானுன் என்னுடன் நந்தினியும் வான வீதியில் நடந்து கொண்டிருந்தோம் - பூலோகத்தில் இருக்கும் சொர்க்கத்தை(வீட்டை) பார்த்தபடி.

வீடும் காதலும் - 1

காஞ்சிபுரத்தில் வீடுகள் கொஞ்சம் நீளமாகவே இருக்கும். நாங்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் மொத்தம் ஆறு குடித்தனங்கள். மாடியில் இரண்டும் கீழே நான்கும் என குடியிருந்தோம். மொத்தம் பத்து வாசற்கட்டுகளை கடந்தால் தான் தோட்டம் வரும். முதல் இரண்டு வாசல்களுக்கு இடையில் சிறு வராண்டாக்கள் இருக்கும். இங்கே தான் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருப்போம். இரண்டாவது வாசற்படியில் உள்ள கதவை சாத்துவது சற்றே கடினம். மிகப் பெரிய தேக்கு மரத்தினாலான கதவு அது. கலை நயமிக்க வேலைப்பாடுகள் அமைந்த அந்த கதவின் இரு புறமும் விளக்கு வைக்க மாடங்கள் உண்டு. மார்கழி மாதத்தில் நாள் தவறாமல் காலையும் மாலையும் விளக்கு வைக்க சொல்வாள் செட்டியாரம்மா. கார்த்திகை மாதத்தில் மாலை மட்டும் விளக்கு வைக்க சொல்வாள். கதவிற்கு மேல கண்ணாடி போட்ட கஜலக்ஷ்மி படமும் அதற்கும் சற்று மேல சங்கு, திருநாமம், சக்கரம் கொண்ட படமும் பதிக்கப்பட்டு இருக்கும். தினமும் காலையில் செட்டியார் இங்கு வரை வந்து ஊதுவத்தி காட்டுவது வழக்கம். மூன்றாவது வாசலை ஒட்டி ஒரு சிறு தாழ்வாரம் இருக்கும். சற்றே பெரிதான டிவீஎஸ் போன்ற வண்டிகளை நிறுத்துவதற்கான இடம் அது.

மூன்றாவது மற்றும் நான்காவது வாசல்களுக்கு இடையே ஒரு பெரிய முற்றம். விதானம் உயர்த்தப்பட்டு சுற்றிலும் ஜன்னல்கள் வைத்து தேக்குமர வேலைப்பாடுகளுடன் பார்க்கவே அற்புதமாய் இருக்கும். ஜன்னல்களுக்கு சற்றே கீழே உட்கார்ந்தவாறு காந்தி சிரித்தபடி நூல் ராட்டை சுற்றி கொண்டிருப்பார். விடுதலைக்கு முந்திய சந்ததியினர் இருக்கும் பெரும்பான்மையான வீடுகளில் காந்தி இன்றும் புகைப்படத்திலாவது இருக்கிறார் என்பது ஆறுதல்.காந்தி ஜெயந்தியின் போது செட்டியார் யாரைக் கொண்டாவது அந்த புகைப்படத்தை துடைத்து பஞ்சினால் தானே திரித்த ஒரு பெரிய மாலையை அதற்கு அணிவிக்க வைப்பார்.

அட சொல்ல மறந்துட்டேனே. இங்கே தான் அழகான ஊஞ்சல் ஒன்றும் இருக்கும். இந்த ஊஞ்சலில் ஆடுவதற்கு இந்த வீட்டில் குடி இருக்கும் அத்தனை பேரும் விருப்பப்படுவார்கள். அதுவும் செட்டியாரும் செட்டியாரம்மாவும் இல்லாத நேரம் என்றால் கேட்கவே வேண்டாம். உயர்ந்த விதானத்தில் இருந்து பத்தடி கிழிறக்கி ஒரு மின்விசிறி உண்டு. காற்று வருவதற்கு ஏதுவாக அமைக்கப் பட்டது. அதை ஊஞ்சலில் உட்கார்ந்தபடி கைகளால் தொட்டு விடும் அளவுக்கு ஆடுவோம். தேக்கு மரத்தினாலான இந்த ஊஞ்சல் மிகவும் அழகானது. நன்றாக செதுக்கப்பட்டு வார்னிஷ் அடித்து வைத்திருப்பார்கள். இரும்பு சங்கிலிகள் கொண்டு கீழ் முற்றத்தின் கட்டை ஒன்றில் தொங்கவிட்டிருப்பார்கள். சங்கிலிகளின் முடிவில் மணிகள் கட்டப்பட்டிருக்கும். யாரும் ஊஞ்சலில் வந்தமர்ந்தாலே ஒலி எழுப்பும். புதிதாக வீட்டிற்கு வருபவர்கள் தெரியாமல் ஊஞ்சலை லேசாக இடித்தவாறு சென்றால் உடனே செட்டியாரம்மா முற்றத்தின் இடப்பக்கத்தில் இருக்கும் சமையற்கட்டில் இருந்து கொண்டே யாரது என்று குரல் கொடுப்பாள்.

மற்ற வாசல்களையும் வேகமாக கடந்து நேராக தோட்டத்தின் கதவை திறந்தேன்.மனதில் கோபம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அப்படியென்ன கேட்டு விட்டேன் நான். இருந்தாலும் நந்தினிக்கு கொஞ்சம் திமிரு தான் என்று எண்ணிக்கொண்டே கதவை லேசாக சாற்றி விட்டு தோட்டத்திற்குள் நுழைந்தேன். யார் வேண்டுமானால் எப்போதும் வரலாம் என்பதால் தான் இந்த எச்சரிக்கை. சிலருக்கு படிக்கும் போது பாட்டு கேட்பது, தலையை உலைப்பது, நகங்களை கடிப்பது போல எனக்கு படிக்கும் போது தோட்டத்தில் அணிலோ, கிளிகளோ, மைனாக்களோ அல்லது சிட்டுக்குருவிகள், தவிட்டுக்குருவிகளோ கத்திக் கொண்டிருந்தால் நன்றாக இருப்பதாக தோன்றும். பெரும்பான்மையான என் பொழுதுகள் இந்த தோட்டத்தில் தான் கழியும். மனதிற்கு மிகவும் நெருக்கமான இடம் இது. நான் எப்போது கோபம் கொண்டாலும் தோட்டத்தில் சிறிது நேரம் இருந்தால் கொஞ்சம் அமைதி ஆகிவிடுவது வழக்கம்.

தோட்டம் சிறிது தான் என்றாலும் நாங்கள் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு இடம் உண்டு. பவுண்டரி லைன் தான் கொஞ்சம் கிட்டக்கவே இருக்கும். நேராக பின் மதில் சுவரில் பட்டால் சிக்ஸ். ஒரு முறை தரையில் அடித்தோ அல்லது உருண்டோ சென்று சுவரில் பட்டால் ஃபோர். தோட்டம் என்றால் பூச்செடிகளும் மரங்களும் இல்லாமல் இருக்குமா என்ன? முன்னாடியே நிற்கும் முருங்கை மரத்திலோ அல்லது வாழை மரத்திலோ அல்லது டிசம்பர் பூச்செடியிலோ பட்டால் ஜி1. அடுக்கு மல்லி அல்லது செம்பருத்தி பூச்செடியிலோ தென்னை அல்லது எலுமிச்சை மரத்திலோ பட்டு நின்றால் ஜி2. சில மாலை வேளைகளில் நேரம் தெரியாமல் விளையாடுவோம். அப்போதெல்லாம் இந்த அடுக்கு மல்லியின் வாசம் தான் எங்களுக்கு மணியாகிவிட்டதை சொல்லும். அதன் வாசம் ஆளையே தூக்கும். மொத்தமாய் ஃ எழுத்தை போல மூன்று கும்பல்களாக அடுக்கு மல்லி செடிகள் அடர்ந்திருக்கும். அந்த பூக்களை பறிப்பதற்கு குடியிருப்பவர்களிடையே போட்டாப்போட்டி நிலவும்.

எலுமிச்சை மரம் அடுக்குமல்லிகளின் முடிவில் சற்றே வலதுபுறம் கிளை பரப்பி நிற்கும். அதிலிருந்து இரண்டடி தூரத்தில் ஓங்கி வளர்ந்திருக்கும் தென்னை மரம். தென்னை மரத்திற்கு அப்பால் நான்கடி தூரத்தில் பின் மதில் சுவர். எங்கள் பவுண்டரி லைன். எனது பெரிய அண்ணன் சில சமயம் சுவரை தொடமால் நின்று சிக்ஸ் செல்லும் பந்துகளை லாவகமாக பிடித்து விடுவான். அவன் பவுண்டரி லைனில் நின்றால் நாங்கள் அடிப்பது வெறும் ஜி1 இல்லை என்றால் ஜி2 தான். தென்னை மரத்திற்கும் பின் மதில் சுவருக்கும் இடையே பெயர் தெரியாத நிறைய செடிகொடிகள் அடர்ந்து கிடக்கும். முசுமுசு கொடி, கோவை கொடி, ஒரு வகையான பருப்புக்கீரை, மஞ்சள் பூப்பூக்கும் ஒரு கொடி, ஊதா நிறத்தில் பூப்பூக்கும் ஒரு செடி என நிறைய உண்டு.

ஈசிச்சேர் எடுத்துக்கொண்டு போய் எலுமிச்சை மரத்தின் அடியில் போட்டேன். அதில் சாய்ந்து கொண்டு நீலவானத்தில் நகர்ந்து செல்லும் மேகங்களை பார்த்தபடி இருந்தேன். மனதில் எண்ணவோட்டங்கள் ஆரம்பித்தன. எங்கெங்கோ எண்ணம் போயும் வந்தும் கொண்டிருந்தது. "ஒன்னு தானே கேட்டேன் அவகிட்டே அதுக்கு ஏன் இப்படி" - சமாதானம் செய்ய முயற்சித்து நானே தோற்று கொண்டிருந்தேன். கோபத்தில் கண்களில் கண்ணீர் வழிந்தோட ஆரம்பித்திருந்தது.

பக்கத்து வீட்டில் இருக்கும் கொடுக்காப்புளி மரத்தில் கிளிகள் இரண்டு ஒரு பழத்திற்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தன. எலுமிச்சை மரத்தின் இன்னொரு முனையில் இருந்து அணில் ஒன்று கிரீச் கிரீச் என்று கத்தி கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் நான் எழுந்திருக்க கூடும் என்று தென்னை மரத்திற்கு தாவ ஏதுவாக அமர்ந்து கொண்டு வாலை தூக்கித் தூக்கி கத்திக் கொண்டிருந்தது. மதில் சுவரின் பின்னால் இருக்கும் சத்திரத்தின் சுவரில் பூனை ஒன்று போய்க்கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் பக்கத்து வீட்டின் கடைசியில் இருக்கும் வேப்பமரத்தில் இருந்து கொண்டு இந்த தவிட்டுக்குருவிகள் இத்தனை கூப்பாடு போடாது. தோட்டத்தின் இரு புற சுவர்களின் நடுவே துணி காயப்போடும் கொடி கம்பிகள் குறுக்கும் நெடுக்குமாக கட்டப்பட்டிருக்கும். எப்போது வேண்டுமானாலும் யாரும் வரலாம் என்ற எச்சரிக்கையோடு தனிச்சையாக கைகள் கண்ணீரை துடைத்தபடி இருந்தன.

"சொத்" என்ற சப்தம் கேட்டதும் தான் மீண்டும் தோட்டத்திற்கு வந்தேன். ஒரு வேளை குரங்கு தான் தென்னை மரத்தில் இருந்து எதையும் போடுகிறதோ என்று யோசித்தேன். நல்லவேளை இல்லை. ஒரு பழுத்த எலுமிச்சை தான் சற்று தூரத்தில் விழுந்திருந்தது. வாரத்தில் நான்கு நாட்களாவது குரங்கு பட்டாளம் வந்து விடும். வாழை மரங்களின் குருத்தையும் இளநீரையும் ஒரு கை பார்த்துவிட்டு பக்கத்து வீட்டு வேப்பமர நிழலிலோ சத்திரத்தின் உயர்நிலை தண்ணீர் தொட்டியின் கீழோ இளைப்பாறிவிட்டு செல்லும். சில சமயங்களில் வீட்டிற்குள்ளும் வந்து விடுவதுண்டு.

அடர்த்தியான எலுமிச்சை இலைகளையும் தாண்டி ஆங்காங்கே சூரியன் என்னை சுட்டுக்கொண்டிருந்தது. அதுவரை சுட்டதாக தெரியவில்லையே என்று யோசித்தபடி இருந்தேன். கன்னங்களில் கண்ணீர் காய்ந்து கறையாகி இருந்தது. ஈசிச்சேரில் இருந்து எழுந்து அதை மடித்து வைத்தேன். பாரம் குறைந்தது போல் இருந்தது. மெதுவாக குழாயடி நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அழுதது தெரியாமல் இருக்க கை, கால், முகம் கழுவிக் கொண்டு உள்ளே சென்றேன். தோட்டக்கதவை சாத்திக்கொண்டு உள்ளே வந்தேன்.

வலது புறம் கிணறும் கீழே குடியிருக்கும் வீடுகளின் நீர் பயன்பாட்டிற்கான தொட்டியும் உண்டு. இடது புறம் வரிசையாக குளியலறைகள். ஒரு காலத்தில் பட்டு நெசவுக்காக சாயமேற்ற கட்டப்பட்ட சின்ன சின்ன தொட்டிகளும், மாட்டுகொட்டகைக்கு ஏற்ப இரும்பு வளையங்களும் அங்கங்கே இருக்கும். கிணற்றில் நீர் இருந்தாலும் இறைப்பது கிடையாது. போர் போட்டு மோட்டார் வைத்து தான் கீழே உள்ள தொட்டிக்கும், மேலே இருக்கும் விடுகளின் நீர் பயன்பாட்டிற்கான மேல்தொட்டிக்கும் தண்ணீர் ஏற்றுவார்கள். மோட்டார் போடும் சுவிட்ச் எங்கள் வீட்டின் எதிரில் தான் இருக்கும்.

சில சமயம் ஐஸ் பாய் விளையாடும் போது கிணற்றுக்குள் அல்லது தொட்டிக்குள் கூட ஒளிந்து கொள்வதுண்டு. கீழே இருந்த குடித்தனங்களில் எட்டு பேர் நாங்கள் ஐஸ் பாய் விளையாடுவோம். பொடிசுகளை ஒப்புக்கு சப்பான் என்று சொல்லி கண்ணை மூடி கொள்பவரின் பின்னாலே நிறுத்தி விடுவோம். தோட்டத்தில் இருந்து உள்ளே வந்த பிறகு முகம் கழுவி ஏழு மணி வரை படிப்பது போல் இருந்து விட்டு ஐஸ் பாய் விளையாட ஆரம்பிப்போம். எட்டரை மணிக்கு செய்திகள் போடும் போது தான் சாப்பிட போவதாக விளையாட்டை நிறுத்துவோம். ஏழாவது கட்டில் இருந்து தோட்டத்தின் கதவு வரை தகரம் வேய்ந்த இரண்டு குடித்தனங்கள் தான். கொஞ்சம் இருட்டாக இருக்கும். எங்கு வேண்டுமானாலும் ஒளிந்து கொள்ளலாம். சில சமயம் தகரத்தின் மீது கூட ஏறிக்கொள்வோம்.

தகரத்தின் மீது ஏற ஏதுவாக குளியலறைகளை ஒட்டி இரண்டடி முன்னால் சிறு திண்ணையும் அதையொட்டி துளசி மாடமும் இருக்கும். தினமும் காலையில் செட்டியாரம்மா வெள்ளி விளக்கு மற்றும் வெள்ளி பூஜை சாமான்களுடன் துளசி மாடத்திற்கு வருவாள். பூஜை முடிந்து எங்கள் வீட்டு வாசலை கடக்கும் போது நெய்வேத்தியத்திற்கு கொண்டு வந்த கற்கண்டையோ, பேரீச்சம் பழத்தையோ அல்லது குல்கந்தையோ (ரோஜா இதழ், தேன், கற்கண்டு கலந்து தயாரிக்கப்படுவது - எனக்கு தெரிந்தவரை) என்னைக் கூப்பிட்டு கொடுத்து விட்டு செல்வாள்.

இன்னமும் என் மனது நந்தினி சொன்ன வார்த்தைகளையே அசைப் போட்டுக்கொண்டிருந்தது. அத்தனை எளிதாக எப்படி அவளால் சொல்லிவிட முடிந்தது என்று யோசித்து யோசித்து களைத்துப் போனேன். இருந்தாலும் நான் அவளிடம் கேட்டிருக்க கூடாதோ என்றும் மறுபுறம் தோன்றியது. ஆசை உள்ளவர்கள் யாரும் கேட்பது தானே என்று எனக்கு நானே சமாதானம் அடைய முயற்சித்தேன்.

தொலைவின் வரிகள் - 2

 தொலைவின் வரிகள் -1 படிக்க இங்கே செல்லவும்

மௌனம்
நம்மிடையே நிலவும் மௌனத்திற்கு என்ன வேலை தெரியுமா? - என்னை
உன்னை பற்றியே நினைக்கச் செய்வதும் - உன்னை
என்னை பற்றியே நினைக்காதது போல் நடிக்கச் செய்வதும் தான்.

போரும் அமைதியும் (War and Peace)
கடலென ஆர்ப்பரிக்கும் வார்த்தைகளும் சரி
கண நேர மௌனமும் சரி
நம்மை நெருக்கியே வைத்திருக்கிறது
முன் எப்போதும் இல்லாதபடி.

கொலுசுச்சத்தம்
தெருவில் மழை நீர் சலசலத்து கொண்டிருந்தது
உனது கொலுசுச் சத்தம் நினைவுக்கு வந்தது
பின்னால் இருந்து என் கண்கள் மூடினாய்
கண்ணாமூச்சி ஆடத் தொடங்கியது நம் இதயங்கள்.

ஒரு விநாடி...ஒரு கேள்வி (One second...A question)
நாம் தொலைத்த விநாடிகள்
நாம் தொலைந்த விநாடிகள்
எது நமக்கு நெருக்கமாக இருக்கின்றன?

பிரபஞ்ச வெளிச்சம்
திருமலைக்கோவில் விளக்கு; குற்றால சாரல் இடி மின்னல் - பார்த்து
கண்கள் மூடி திறந்தேன் எங்கும் ஒரே இருட்டு.
மாலை நேரம் நீ தெருவில் நடந்து சென்றாய் - பார்த்து
கண்கள் மூடி திறந்தேன் எங்கும் வியாபித்திருந்தது
பிரபஞ்ச வெளிச்சமாய் உன் முகம்.

Tuesday, October 13, 2009

தொலைவின் வரிகள் - 1

நெருக்கம்
உன் மூச்சு காற்றின் வெப்பம் உணர்த்தாத நெருக்கத்தை
உன்னை பிரிந்த மறு விநாடி உணர்த்தியது.

பஞ்சு மிட்டாய்
கடல் தாண்டிய கண்டத்தில் கூட
கணப்பொழுதில் வந்து செல்கிறாய்;
காட்டன் கேண்டி பார்க்கும் போதெல்லாம்.

இலையுதிர் காலம்
இலையுதிர்ந்த மரங்களின் கீழ் நின்று உன்
நினைவுகளை அசைப்போட்டு கொண்டிருந்தேன்
காற்றில் பறந்தபடி இருந்தது ஒரு வண்ணத்துப்பூச்சி.

பயணம்
பேருந்தில் ஏறி அமர்ந்தேன் யாருமே இல்லை
உன் நினைவுகளோடு நான் மட்டும் பயணிக்கிறேன்.

நனைக்காத மழை...நினைவு குடை...
சியாட்டிலில் எட்டு மாதமும் மழை தான்
சிறிதும் நனையவில்லை நான்
செல்லும் இடமெல்லாம் உன் நினைவே குடை.

பகல் ஒளி சேமிப்பு (அட Daylight saving ba )
பகல் நேரம் அதிகமாகும் இரவு நேரம் சுருங்கிவிடும்
எனக்கு மட்டும் இரவு நீண்டு கொண்டே இருக்கிறது
எப்போதும் உன் நினைவுகளில் மூழ்கியபடி.

தொலைந்து போனாய்...சிறிது காலமாய்...
தொலைவில் நீ அங்கு
தொலைந்தேன் நான் இங்கு
உன் ஒற்றை வரியில் விழித்தேன் இன்று
என் வரிகளே சாட்சியாய் இங்கு.