Monday, December 28, 2009

கோர்வையற்ற நினைவுகளின் தொகுப்பு

நினைவில் நின்றவை...

சில மாதங்களுக்கு முன்பு நானும் எனது மாமாவின் பையனும் ரயிலில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தோம். பண்டிகை சமயத்தில் சென்னை சென்று துணி எடுப்பது வழக்கம். இந்த முறையும் தீபாவளிக்கு ஷாப்பிங் செய்ய தான் சென்று கொண்டிருந்தோம். அமெரிக்கா சென்று வந்த பின் அங்கே வெதர் எப்படி இருக்கும், என்ன பண்ணுவீங்க, எப்படி பயணம் செய்வீர்கள், சாப்பாடு எல்லாம் எப்படி இருக்கும் என்ற அவன் கேள்விகளுக்கு பதில் சொல்வதே எனக்கு சரியாக இருக்கும். அன்றும் ரயில் ஏறியதில் இருந்தே அவன் கேள்விகளை கேட்க ஆரம்பித்திருந்தான். திடீரென்று எனது செல்போன் அலறியது. அவன் தான் செல்போனில் பாட்டு கேட்க வேண்டும் என்று வாங்கி கையில் வைத்திருந்தான். அழைப்பு வந்ததும் என் கையில் திணித்தான். எண்ணை வைத்து யார் கால் செய்கிறார்கள் என்று என்னால் கணிக்க முடியவில்லை. போனை எடுத்து ஹலோ என்றேன். மறுமுனையில் இருந்து என் பெரியப்பாவும் அண்ணனும் பேசினார்கள். போனை வைத்த பின் நம்பரை ஸ்டோர் செய்தேன். அது வரை பக்கத்தில் இருந்த மாமா மகன் இவங்க நம்பர் வேண்டுமா, அவங்க நம்பர் வேண்டுமா என்று தொடர்ச்சியாக ஒரு பதினைந்திற்கும் மேலான போன் நம்பர்களை வரிசையாக அவனது செல்போனை பார்க்காமல் சொன்னான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதே சமயம் இதே போல் செல்போன் வராத காலத்தில் நான் மனப்பாடமாக வைத்திருந்த நம்பர்களின் எண்ணிக்கை ஐம்பதையும் தாண்டும் என்றளவு நினைவிற்கு வந்தது. சற்று நேரத்திக்கு முன் போன் செய்த பெரியப்பாவின் நம்பர் கூட எத்தனையோ முறை அம்மா போன் பேசும் போது சொல்லி இருக்கிறேன். எப்படி இவை எல்லாம் மறந்து விட்டன என்று யோசித்தபடி இருந்தேன். முதன் முதல் செல்போன் வாங்கி ஓசூரில் வைத்து தொலைத்த போது அதில் போட்டிருந்த அப்போதைய ஹட்ச் செல்போன் நம்பர் கூட என் நினைவிற்கு வரவில்லை. ஓசூரில் இருக்கும் போது அடிக்கடி நான் கூப்பிடும் இரண்டு நண்பர்களின் பழைய செல்போன் நம்பர்கள் கூட நினைவிற்கு வரவில்லை. நண்பர்களுக்கே போன் போட்டு கேட்டேன். அவர்களுக்கும் நினைவில் ஏதும் இல்லை என்றார்கள். இப்படி நாம் எதையெல்லாம் மறந்து கொண்டிருக்கோமோ தெரியவில்லை.

உங்களுக்கு உங்கள் பழைய செல்போன் நம்பர் நினைவில் இருக்கிறதா?

வேடம் கலைந்தது...

சில நாட்களாக காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்திலோ அல்லது ரயிலிலோ அலுவலகம் சென்று வந்து கொண்டிருக்கிறேன். வீட்டில் இருந்து செல்வதால் காலையில் முன் எப்போதும் இல்லாத உற்சாகத்துடனே போன திங்கள் கிழமையும் கிளம்பினேன். திங்களன்று காலை எப்போதும் ரயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அன்று தாம்பரம் வழியாக அடையாறு செல்லும் ஏழு மணி பேருந்தில் ஏறினேன். எட்டரை மணிக்கு தாம்பரத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டு பீச் செல்லும் மின்சார ரயில் சென்றவுடன் திறப்பார்கள். அன்றும் மூடப்பட்டிருந்த கேட் முன் பேருந்து நின்றது. சற்று நேரத்தில் பக்கத்தில் ஒரு தனியார் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி செல்லும் வண்டி வந்து நின்றது. வண்டியின் முன் வரிசையில் விவாஷ் ஜெயினும், ஹரிபிரசாத்தும் அமர்ந்திருந்தார்கள். எப்படி பெயர் தெரியும் என்று கேட்கிறீர்களா? அவர்களின் அடையாள அட்டையில் தான் நானும் பார்த்து தெரிந்து கொண்டேன் [ஆறு வருஷ அனுபவம்ல!!!...ம்ம்ம்]. அவர்கள் முகத்தில் திங்கள்கிழமை பள்ளி செல்லும் சோகம் எதுவும் தெரியவில்லை. மாறாக உற்சாகம் ததும்பி வழிந்து கொண்டிருந்தது. அந்த வண்டியில் இருந்த குழந்தைகள் அனைவருமே உற்சாகத்தோடு காணப்பட்டனர். ஒருவரிடம் இருந்து உற்சாகம் மற்றவர்களுக்கு பரவியிருக்கக்கூடும். நானும் காதில் ஐபாடை மாட்டிக்கொண்டு, கேட்டாலே உற்சாகம் தரும் பாடல்களைத்தான் கேட்டுக் கொண்டிருந்தேன். விளையாடிக் கொண்டிருந்த விவாஷும், ஹரியும் ஜன்னல் பக்கம் பார்த்தவுடன் என்னைப் பார்த்து உற்சாகத்தோடு கையசைத்தார்கள். நானும் ஐபாடை காதில் இருந்து எடுக்காமல் அவர்களை பார்த்து புன்னகைத்தேன். வண்டி டிரைவர் கையெல்லாம் வெளியே நீட்டக் கூடாது என்று சத்தம் போட்டார். இருவரும் சடக்கென்று கையை உள்ளே இழுத்துக் கொண்டனர். இரண்டு நொடிகள் கூட கடந்திருக்காது. ஒரக்கண்ணில் டிரைவரை பார்த்தபடி விவாஷும், ஹரியும் மறுபடி என்னைப் பார்த்து கையசைத்தார்கள்-இப்போது இன்னும் அதிக உற்சாகத்துடன். டிரைவர் அவர்களை கண்டும் காணாதது போல் இருந்து கொண்டார். இதுவரை நான் அவர்களை பார்த்து புன்னகைத்தேனே தவிர, காதில் இருந்து ஐபாடை எடுக்கவோ, கையசைக்கவோ இல்லை. என் சீட்டில் கடைசியாக இருந்த சிறுவன் அவன் அப்பாவை நகர சொல்லி விட்டு என்னையும் தாண்டி அவர்களை நோக்கி கையசைத்தான். எனக்கு இப்போது தான் உரைத்தது-நான் உற்சாகம் என்று சொல்லிக் கொள்வது உற்சாகம் அல்ல என்று. ஐபாடை எடுத்து உள்ளே வைத்தேன். விவாஷையும், ஹரியையும் நோக்கி உற்சாகமாக நானும் கையசைத்தேன், என்னருகில் இருந்த பெயர் தெரியாத சிறுவனை மடியில் வைத்துக் கொண்டு. மனம் எங்கும் உற்சாகம் பரவிக் கொண்டிருந்தது.

உங்கள் உற்சாகம் எதில் இருக்கிறது என்று தெரியுமா?

No comments: